அரவிந்த் கெஜ்ரிவால் - ஓர் இஸ்லாமியனின் அலசல்.
அரவிந்த் கெஜ்ரிவால் - ஓர் இஸ்லாமியனின் அலசல்.
இந்தியாவில் வாழ்கிற இஸ்லாமியச் சமுதாயம் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒரு பாதுகாப்பற்ற தன்மையையே உணர்ந்து வருகிறது. அதனுடைய விளைவு என்னவென்றால் புதிதாகக் கண்ணுக்குத் தெரிபவர்களை எல்லாம் நம்மை இவர் பாதுகாப்பார் என்கிற ஆதரவு நிலையை எடுத்து வருவது பரிதாபத்திற்குறிய ஒன்றாகும்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் தான் நம்மைக் காக்கக்கூடியவர்கள் என நம்பியதற்கு காங்கிரஸ் செய்த துரோகங்கள் கொஞ்சமல்ல. முஸ்லீம் லீக் வலுவாக இருந்த சமயத்தில், கேரளாவில் முஸ்லீம் லீகின் தலைவராக இருந்த அப்துற் றஹ்மான் பாபுத் தங்கள் அவர்கள் காங்கிரஸோடு கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க முயற்சித்தார்கள்.
ஆனால் அன்றைக்கு தென் மாநிலப் பொருப்பாளராக இருந்த இராஜாஜி, அப்துற் ரஹ்மான் பாபுத் தங்கள் அவர்களுடைய பாஸ்போர்ட்டை முடக்கி அவரின் வெளி நாடு வியாபரத் தொடர்புகளை துண்டித்து விடுவதாக மிரட்டியதால் வேறு வழியின்றி காங்கிரஸிற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் விடயம் என்னவென்றால் முஸ்லீம்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை தடை செய்ததோடு மட்டுமல்லாமல், முஸ்லீம் லீக் கட்சி பொது கூட்டங்கள் நடத்துவதற்குத் தடை விதித்தது. (இந்த தடையையும் இழந்த இட ஒதுக்கீட்டையும் 1967ல் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி காலத்தில் EMS. நம்பூதிரிபாட் மீண்டும் அமலாக்கம் செய்தார். அது மட்டுமல்லாமல் இரண்டு அமைச்சர்களையும் அமைச்சரவையில் முஸ்லீம் லீகிற்குக் கொடுத்தார்.) இது போன்ற காங்கிரஸின் துரோக வரலாற்றை அன்றிலிருந்து இன்றைய பாபர் மஸ்ஜித் இடிப்பு வரை முஸ்லீம்கள் அனுபவித்துக் கொண்டு தான் வருகிறார்கள். ஆனாலும் திருந்தியபாடில்லை.
அடுத்ததாக, கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு புறம் ஆதரித்தாலும் மறுபுறம் அவர்கள் நமக்கிழைத்திருக்கிற கொடுமைகளை மறக்க இயலாது. கிழக்கு வங்கத்தில் நந்தி கிராமத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான அவர்களுடைய தீவிரவாதத்தை மறக்க இயலாது. மோடி செய்த அத்துனை விடயங்களும் அங்கே நடந்தது. ஆனால், அளவில் ஒப்பிடுகையில் அது சிறியது அவ்வளவு தான். கேரளா மாலாட்டுக் கிராமத்தில் அவர்கள் முஸ்லீம்களுக்கு செய்த கொடுமைகளையும் மறக்க இயலாது.
காங்கிரஸிற்கு மாற்றாக வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளக் கூட்டனி அரசு வந்த பொழுது, பிஜேபி அதில் அங்கம் வகித்தது. அதற்கும் சேர்த்து இஸ்லாமியர்கள் வாக்களித்தனர். இன்றைக்கு பிஜேபியுடைய நிலை என்ன?. அனுபவிக்கிறோம். அன்றைக்கு யாரென்றே தெரியாமல் இருந்தவர்கள். முஸ்லீம்களால் மக்களுக்கு அறிமுகமானவர்கள் இன்றைக்கு முஸ்லீம்களை முழு முதல் எதிரியாக நோக்குகிறார்கள்.
தமிழகத்தில் திமுகவாகட்டும் அதிமுகவாகட்டும் முஸ்லீம்களுக்கு கடந்த காலங்களில் இழைத்த கொடுமைகளையும் அநீதிகளையும் மறந்து விட முடியாது. அறிஞர் அண்ணா, காமராஜர் நீக்கிய இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை திரும்பத் தரவும் இல்லை. அதனைத் தொடர்ந்து வந்த அத்துனை கட்சிகளும் அதனைத் தான் செய்தது. இப்படி அரசியல் அனாதைகளாக்கப்பட்ட இஸ்லாமிய சமுதாயம் யாரவது புதிதாக வருகிற பொழுது இவர் நமக்கு ஆதரவுக் கரம் நீட்டமாட்டாரா என எண்ணுவதில் தவறில்லை.
அதே சமயம் சட்டென்று அவர்களது பக்கம் சாய்ந்துவிடுதல் மிகப் பெரிய தவறு. அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலை ஒழிக்க வந்த ஒப்பற்ற தலைவராகப் பார்க்கப்படுகிறார். ஆனால், அதே சமயம் மனித உயிர்களின் முக்கியத்துவம், அவர்களின் உரிமைகளைப் பற்றி இன்று வரை வாய் திறந்திருக்கிறார எனப் பார்த்தால், இல்லை என்கிற பதில் தான் கிடைக்கிறது. காங்கிரஸ் மற்றும் பிஜேபிக்கு மாற்றாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிற இவர், ஓர் இஸ்லாமியனின் பார்வையில் இஸ்லாமியர்களைக் கண்டு கொள்ளாதவராகத் தெரிகிறது.
ஏனெனில், பல முறை மோடியின் மீதான ஊழல் குற்றச் சாட்டுகளை முன் வைத்த கெஜ்ரிவால், அந்த மோடி செய்த மிகப் பெரிய குற்றமான இஸ்லாமியப் படுகொலையை என்றைக்காவது சுட்டிக் காட்டியிருக்கிறாரா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். உலகத்திலுள்ள அனைத்து தலைவர்களும் மோடியை வெறுப்பது இனப் படுகொலைக்காகத் தான். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் அதைப் பற்றிப் பேசவே இல்லை என்பது ஓர் இஸ்லாமியனாக மிகவும் சந்தேகப்படவே வைக்கிறது.
மேலும் 400 வருடங்கள் பழமை வாய்ந்த டெல்லியிருந்த மெஹ்ரௌலி பள்ளி வாசல் மற்றும் அதைச் சுற்றியிருந்த இஸ்லாமியர்களின் வீடுகளையும் 2012 ல் டெல்லி நகர வளர்ச்சித் துறை ஆணையம் சட்டத்திற்கு புறம்பாக உரிமை கோரி இடித்துத் தள்ளியது. அதைப் பற்றிய தனது நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்னரோ அல்லது வெற்றி பெற்ற பின்னரோ அரவிந்த் கெஜ்ரிவால் பேசவில்லை என்பது வருத்ததிற்குறிய ஒன்று.
டெல்லியின் முதல்வராக இருக்கக் கூடியவர், பிரதம வேட்பாளராக பார்க்கக் கூடியவராக மாறி இருக்கிறார். கூடங்குளம் பிரட்சினையின் போது இடிந்த கரை என்ற ஓர் ஊரைச் சார்ந்த மக்களின் நலனுக்காக டெல்லியிருந்து வந்தவர், முசாபர் நகர் கலவரத்தைப் பற்றி இன்று வரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. தேசிய அரசியலில் ஈடுபட நினைக்கும் இவர், இஸ்லாமியர்களின் பாபர் மசூதி இடிப்பு, டெல்லி மெஹ்ரௌலி மசூதி மற்றும் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு, குஜராத் கலவரக் குற்றவாளிகள் பற்றிய பார்வை போன்றவற்றில் இவரது நிலைபாடு என்ன என்று தெரியாமல் இஸ்லாமியர்கள் குருட்டுக் கோழி தவிட்டைத் தின்ற கதையாக ஆதரிக்கத் தொடங்குவார்கள் எனில் பழைய சூடுகள் மீண்டும் கிடைக்கலாம்.
உங்கள் வாக்குகள் மிகவும் வலிமையானதாக மாறிக் கொண்டிருக்கிற சமயத்தில் உணர்ச்சி வயப்பட்டு முடிவெடுக்காமல் பொது நலம் கலந்த சமுதாய நலத்தோடு புதியதாக வந்திருக்கிற அரவிந்த் கெஜ்ரிவால் விடயத்தில் முடிவெடுத்தால் நன்றாக இருக்கும். ஊழலற்ற ஒப்பற்ற ஆட்சி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் அதை அனுபவிக்கிற உரிமையும், உரிமையை அனுபவிக்க உயிரும் இஸ்லாமியர்களுக்கு முக்கியம். அதற்கான உறுதியான சட்ட யாப்பை அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்க உறுதி அளித்தால் இஸ்லாமியர்கள் ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
Thanks
Facebookமுனீப் அபுஇக்ராம்