பெரம்பலூர் மாவட்டத்தில் +2 தேர்வு 7,900 பேர் எழுதுகிறார்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் +2 தேர்வு 7,900 பேர் எழுதுகிறார்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 7,900 பேர் எழுதுகிறார்கள் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர் மீது கடும் நடவடிக்கை
பெரம்பலூர்,: பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வினை 7,900 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஆர்ஓ சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 2013ம் ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்விற்கான கண்காணிப்பு குழுக் கூட்டம் நேற்று நடந் தது. டிஆர்ஓ சுப்ரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களில் செய்யப்பட வேண்டிய சுகாதாரப்பணி, குடிநீர் வசதி, மின்வசதி, தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் வந்து சேரும் வகையில் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்கும் பணி, தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது, தேர்வு பணிகளுக்காக கல்வித்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் டிஆர்ஓ சுப்ரமணியன் பேசியதாவது: வரும் மார்ச் 1ம்தேதி முதல் 27ம்தேதி வரை நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 58 பள்ளிகளைச் சேர்ந்த 4,089 மாணவர்களும், 3,811 மாணவிகளும் என மொத்தம் 7,900 பேர் எழுத உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவ தும் 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் வரும் மார்ச் 27ம்தேதி முதல் ஏப்ரல் மாதம் 12ம்தேதி வரை நடைபெற உள்ள 10ம்வகுப்பு பொதுத்தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 123 பள்ளிகளைச் சேர்ந்த 4,973 மாணவர்களும், 4,405 மாணவிகளும் என மொத்தம் 9,378 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தேர்விற்காக மாவட்டம் முழுவதும் 26 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் தனித்தனியே பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட உள்ளன. தேர்வுகளில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வுகளை நல்ல முறையில் தேர்வு எழுதி பெரம்பலூர் மாவட்டத்திற்கு நற்பெயரினை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியன், தொடக்க கல்வி அலுவலர் சுப்ரமணியன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சிவசாமி, மெட்ரிக் பள்ளிகளின் துணை ஆய்வாளர் பெருமாள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப்பு துறை அலுவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள், ஊர்க்காவல் படையினர், கல்வித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Thanks
Dinakaran