10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சியை அதிகரிக்க தீவிர முயற்சி அரசு விடுதிகளில் சிறப்பு பயிற்சி
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சியை அதிகரிக்க தீவிர முயற்சி அரசு விடுதிகளில் சிறப்பு பயிற்சி
பெரம்பலூர்: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து, மாநிலத்தில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக இம் மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் மாணவர்களை தங்க வைத்து சிறப்பு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 91.59% தேர்ச்சி பெற்றது. இதில் அரசுப் பள்ளிகள் 81.5% தேர்ச்சி பெற்றன. இதன் மூலம் மாநிலத்தில் இம் மாவட்டம் 20வது இடத்தைப் பெற்றது.
சுயநிதிப் பள்ளிகள் அளவில் 99.3% தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை வென்றது. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் அளவில் 87.5% தேர்ச்சி பெற்று 14வது இடம் வகித்தது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அளவில் 97.1% தேர்ச்சி பெற்று 5ம் இடத்தை வென்றது.
இதையடுத்து, இம்மாவட்டத்தை தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியாக களரம்பட்டி மேல்நிலைப் பள்ளி ஒன்று மட்டுமே உள்ள நிலையில் அதற்காக கூடுதல் முயற்சி மேற்கொண்டு வருவதால் அப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் மாநிலத்தில் 10 இடங்களுக்குள் வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிளை அலசி ஆராய்ந்து, குறைந்த மதிப்பெண் எடுத்துவரும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காலாண்டுத் தேர்வுக்குப் பிறகு எடுக்கப்பட்ட முயற்சிக்குப் பிறகு, அரையாண்டுத் தேர்வில் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 5% அதிகரித்துள்ளது. இதை மேலும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காகக் குறைந்த மதிப்பெண் பெற்ற 2ஆயிரத்து 326 பேரை அருகில் உள்ள அரசு விடுதிகளில் தங்க வைத்து காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்த மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளிலும் இம் மாவட்டம், 91% மேலாகத் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மட்டும் மேலும் அதிகரித்தால், மாநில அளவில் இம் மாவட்டம் முதல் 10 இடங்களுக்குள் கட்டாயம் வரும் என்பதால் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் இணைந்து கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இம் முயற்சியை மாணவர்களும், அவர்களது பெற்றோரும் வரவேற்றுள்ளனர்.
Thanks
Dinakaran