Home
»
Archives for
2013-12-08
ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம்
ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன்? 14-12-2013
14-12-2013 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக ஜனவரி 28 “ல்“ சிறைசெல்லும் போரட்டம் ஏன்? என்ற தலைப்பில் இமாம். முஹம்மது சித்தீக் மற்றும் உபைதுல்லாஹ் ஆகியோர் மேற்கு ஒற்றைத்தெரு, மேற்குநடுத்தெரு, மேற்கு தெற்குத்தெரு, கிழக்கு நடுத்தெரு, கிழக்கு தெற்க்குத்தெரு, அல்ஷா நகர், பிஸ்மில்லாஹ் நகர் ஆகிய பகுதிகளின் 8 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் நோட்டீஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
மொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து
மொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து
மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) ரத்து செய்யப்படும் என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
"கடந்த, 10 ஆண்டுகளில், அதிகளவில் சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது' என, தேசிய குற்ற ஆவண காப்பாகம் (என்.சி.ஆர்.பி.,) தெரிவித்தது. 2012ல், தமிழகத்தில் மட்டும், 68 ஆயிரம் சாலை விபத்துகளில் நடந்துள்ளன; 16,175 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், ஒரு மணி நேரத்திற்கு, எட்டு விபத்து; நாள்தோறும் சராசரியாக, 44 உயிரிழப்பு ஏற்படுகின்றன.
இதையடுத்து, தமிழகத்தில் விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்ட கலெக்டர் தலைமையிலான சாலை பாதுகாப்பு குழுவினருக்கு, போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. அதன்படி, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகினறன.
பெரும்பாலான விபத்துகள், கவனச் சிதறலால் ஏற்படுகின்றன. குறிப்பாக, மொபைல் போன் பேசிக் கொண்டே, வாகனத்தை ஓட்டும் போது ஏற்படும் கவனச் சிதறலால், அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இதையடுத்து, இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், பஸ், லாரி உள்ளிட்ட, எந்தவொரு வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது, மொபைல்போன் பேசிக் கொண்டு இயக்குவதை தடுக்க, போக்குவரதது துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்கான உத்தரவை, தமிழகத்தில் அனைத்து, ஆர்.டி.ஓ.,க்களுக்கும் போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 70 ஆர்.டி.ஓ., (வட்டார போக்குவரத்து அலுவலர்) அலுவலகங்கள் உள்ளன. ஆர்.டி.ஓ., தலைமையிலான கண்காணிப்பு குழுக்கள், அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றன. அப்போது விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இனி, வாகன சோதனையின் போது மொபைல் போனில் பேசிக் கொண்டே செல்லும் வாகன ஓட்டிகள் மீது, அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம். மோட்டார் வாகன சட்டப்பிரிவின் படி, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், மொபைல்போன் பேசிக் கொண்டே, வாகனங்களை இயக்குவது தவறு. இனி, மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுபவரின் ஓட்டுனர் உரிமத்தை அதிகபட்சமாக, 15 நாட்கள் வரை, தற்காலிக நீக்கம் செய்வது தொடர்பாக, "நோட்டீஸ்' வழங்கப்படும். ஓட்டுனர் உரிமம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர், மீண்டும் மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டினால், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வோம். முதற்கட்டமாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பணியை மேற்கொள்ள உள்ளனர். தேவையின் அடிப்படையில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் திட்டமும் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
(டாஸ்மாக்கை தமிழக அரசு திறந்து வைத்து பல குடிகாரர்களை உறுவாக்கி போதையில் அனுப்புவது வேறு கதை)
Thanks
Dinamalar
கடற்படை பொறியியல் கல்லூரியில் படிப்பு இலவசம், வேலை உறுதி
கடற்படை பொறியியல் கல்லூரியில் படிப்பு இலவசம், வேலை உறுதி
இலவசப் பொறியியல் படிப்பு, படித்து முடித்ததும் உத்தரவாத வேலை எந்தப் படிப்பில் கிடைக்கும்? அதுவும் கடற்படையில் அதிகாரி பணி என்றால் சும்மாவா. இந்த வாய்ப்புகளை வழங்குகிறது மகாராஷ்டிர மாநிலம் பூனேயில் இயங்கிவரும் கடற்படை பொறியியல் கல்லூரி.
மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது இந்தக் கல்வி நிறுவனம். இங்குப் பி.டெக். எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகள் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் பெற்ற படிப்புகள். ஒவ்வொரு பிரிவிலும் தலா 90 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
4 ஆண்டு காலம் கொண்ட இந்தப் படிப்பு முற்றிலும் இலவசம். படிப்புக்கான அத்தனை செலவையும் இந்தியக் கடற்படையே ஏற்றுக்கொள்கிறது.
தகுதிகள்
பிளஸ் 2வில் அறிவியல், கணிதப் பாடங்களைப் படித்திருக்கும் மாணவர்கள் இதில் சேரலாம்.
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 55 சதவீத மதிப்பெண்ணும் அவசியம். வயது 16.5 முதல் 19க்குள் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடலும் பார்வையும் முக்கியம்.
அட்மிஷனைப் பொறுத்தவரையில், முதலில் அறிவுத்திறனைச் சோதித்தறியும் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவோருக்குச் சர்வீஸ் செலக்ஷன் போர்டு எனப்படும் பணித் தேர்வு வாரியம் உளவியல் தேர்வு, தனிநபர் தேர்வு, குழுத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றை நடத்தும்.
இறுதியாகத் தேர்வு செய்யப்படுவோர் முதல் 6 மாதங்கள் கடற்படை குறித்த அடிப்படை பயிற்சிக்காகக் கோவாவில் உள்ள கடற்படை அகாடெமிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பிறகு பூனேயில் உள்ளக் கடற்படை பொறியியல் கல்லூரியில் படிப்பைத் தொடருவார்கள்.
நேரடிப் பணி
நான்கு ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பி.டெக். பட்டம் வழங்கும். அதன் பிறகு அவர்கள் இந்தியக் கடற்படையில் நேரடியாக அதிகாரி பணியில் நியமிக்கப்படுவார்கள். தகுதியும் திறமையும் இருந்தால் கடற்படை துணைத் தலைமை தளபதி (வைஸ்-அட்மிரல்) வரை பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
கடற்படை பொறியியல் கல்லூரியில் சேருவது தொடர்பான அறிவிப்பு மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் வெளியிடப்படுகிறது. கடற்படை வேலைவாய்ப்புத் தகவல்களை வெளியிட்டு வரும் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்திலும் அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
Thanks
Tamil hindu

.jpg)



