வெளியூரிலிருந்து கால்நடைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர்
வெளியூரிலிருந்து கால்நடைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் கோமாரி நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க, வெளியூர்களிலிருந்து 2 மாதங்களுக்கு கால்நடைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோமாரி நோய், தொற்றுநோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படக் கூடியது. இந்த நோய் கால்நடைகளை தாக்காமல் இருக்க, இதுவரை 5 கட்ட தடுப்பூசி பணிகள் நிறைவடைந்துள்ளன. நோயானது, மழைக்காலங்களிலும், ஈரப்பதம் அதிகமுள்ள பகுதிகளிலும் வரக்கூடிய வாய்ப்புள்ளது. கால்நடைகள் உணவு சாப்பிடாமல், வாய் மற்றும் குளம்பில் புண் ஏற்பட்டால், கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளித்தால், ஒரு வாரத்துக்குள் நோய் குணமடைந்து விடும்.
இந்த நோய் தாக்கிய கால்நடைகள், அதன் கன்றுகளுக்கு பால்கொடுக்கும் போது கன்றுகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. நோய்த் தாக்கிய கால்நடைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்லாமல், வீட்டிலேயே வைத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்து உரிய சிகிச்சை அளித்தால் கால்நடைகள் உயிரிழப்பதைத் தவிர்க்கலாம்.
மேலும், நோய்த் தொற்றுள்ள பகுதியிலிருந்து கால்நடைகளை வாங்கி வருவதன் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, 2 மாதங்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேறு மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கால்நடைகளை வாங்க வேண்டாம். பெரம்பலூர் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்புப் பணியில் 18 குழு அமைக்கப்பட்டு, 19.9.2013 முதல் 10.10.2013 வரை, 1.15 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், காற்றில் பரவக்கூடியது என்பதால், நோயை கட்டுப்படுத்த அனைத்து ஏற்பாடுகளுடன் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலக சிறப்பறிஞர் தலைமையில், 24 பேர் அடங்கிய 8 குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
Thanks
Dinamani