இனவெறியும், மொழிவெறியும் ஒழியட்டும்!
இனவெறியும், மொழிவெறியும் ஒழியட்டும்!
அமைதியைக் கெடுக்கும் செயல்களில் முதலிடம் வகிப்பது இனவெறியும் மொழி வெறியும்தான். இனவெறி மொழிவெறி கோஷங்கள் ரத்தம் குடிக்காமல் முடிவுக்கு வருவதில்லை.
தன் இனத்தின் மீது அன்பும் அக்கறையும் இருப்பது தவறல்ல.
அந்த அக்கறை அடுத்த இனத்தவரின் இரத்தத்தைக் குடிக்கும் வெறியாக மாறினால் மனித இனம் தழைக்காது. மனிதநேயம் வளராது.
இந்தியாவில் இதுபோன்ற வெறியாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் இலங்கையி-லிருந்து சுற்றுலா வந்த பித்த பிட்சுகள் தாக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலைச் சுற்றிப் பார்க்க வந்த இலங்கை புத்த பிட்சுகள் ஓட ஓட விரட்டி தாக்கப்பட்டனர். இதைப் போன்று டில்லி-யிலி-ருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த புத்த பிட்சுகள் தாக்கப்பட்டுள்ளனர். இது போன்ற தாக்குதல்கள் மனித நேயமிக்கவர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
ராஜ்பக்க்ஷேவைக் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்ற கோஷம் அவர் சார்ந்த மதத்தினரையும் தாக்கக் தூண்டியுள்ளது. தவறு செய்பவனைத் தண்டிக்கலாம், கண்டிக்கலாம்.ஆனால் இதில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத மக்களைத் தண்டிப்பது எவ்வகையில் நியாயம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு பிரச்சினை வந்த போது கேரளாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர்.அவர்களின் கடைகள் உடைக்கப்பட்டன. தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். இதைக் கடுமையாக எதிர்த்த தமிழகக் கட்சியினர் இன்று அதே பாணியைக் கையில் எடுத்து
அராஜகம் செய்வது எந்த வகையில் நியாயம்?
காவிரி பிரச்சினை வரும் போது கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர். இவற்றை நியாயம் என்று இப்போது தாக்குதல் நடத்தியவர்கள் கூறுவார்களா?
இலங்கையைச் சார்ந்த புத்த பிட்சுகளை இங்கு தாக்கியதால் இலங்கையில் இருக்கும் தமிழர்களை அவர்கள் தாக்கத் தொடங்கினால் நிலைமை என்னவாகும் என்பதைச் சிந்தித்தார்களா?போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெறியாக மாறினால் உலகில் எங்கும் அமைதி நிலவாது.
தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களைத் தாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். மத்திய மாநில அரசுகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு கடுமையான தண்டனைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
மொழி என்பது தன் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க இறைவன் வழங்கிய ஓர் அருட்கொடையாகும். இதைப்போன்று இனம் என்பதும் அடுத்தவர்களை இனம் காண்பதற்கு உரிய வழியாகும். மொழியும் இனமும் அன்பைப் பாரிமாறிக் கொள்ள உதவும் சாதனமாகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அவற்றை மக்களைக் கொல்வதற்குரிய துப்பாக்கியாகப் பயன்படுத்தக்கூடாது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலி-ருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர்.அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13)
மனிதர்களே! அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!அறிந்து கொள்ளுங்கள்! அரபிமொழி பேசாதவரை விட அரபி மொழி பேசுபவருக்கு சிறப்பு இல்லை.இதைப்போன்று அரபிமொழி பேசுபவரை விட அரபிமொழி பேசாதவருக்கு சிறப்பு இல்லை. கருப்பனை விட சிவந்தவனுக்கும் சிவந்தவனை விட கருப்பனுக்கும் சிறப்பு இல்லை.இறையச்சத்தின் அடிப்படையிலேயே தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத் 22391)
நன்றி: தீன்குலப்பெண்மனி