ஜன 20 நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 20) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழிக்க ஜன. 20 மற்றும் பிப். 24-ம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள், துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 354 மையங்களில், 46,500 -க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம்களில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்பட 1,416 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.
எனவே, 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து ஏற்கெனவே புகட்டியிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முகாமில் குழந்தைகளை அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து புகட்ட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவதற்கான விழிப்புணர்வு பிரசாரப் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.